நல்ல தலைமுறையை கல்வி உருவாக்குமா?
29.06.2026 I ஆனந்த் I இன் மீடியா – Wisdom News
#Chief Minister Vijay #Education Minister Raj Mohan #Tamilnadu EducationMinistry
இன்றைய நிஜ வாழ்க்கைச் சூழல், மனித இனத்தின் ஒட்டுமொத்த வாழ்வியலுக்கே ஒரு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. இந்தக் கேள்வி – நாம் வாழும் இந்த வாழ்க்கை யாருக்காக? எதற்காக? எதை நோக்கி அமைந்திருக்கிறது? – என்ற அடிப்படையான கேள்வியும் புரிதலும் நமக்குள் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதே இன்று மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
ஏற்கனவே வாழ்ந்து முடித்த தலைமுறையினரும், தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் தலைமுறையினரும், இனி வாழவிருக்கும் தலைமுறையினரும் தங்களுடைய வாழ்வின் நோக்கம் மற்றும் இருப்பின் அர்த்தத்தை உணர்ந்திருக்கிறார்களா என்ற கேள்வியை எழுப்பினால், அதற்கு பதில் “இல்லை” என்றே பதிலளிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
ஒரு மனிதன் ஏன் பிறந்தான், அவனுடைய வாழ்வின் நோக்கம் என்ன, அவன் தன்னையும் தன்னைச் சுற்றியுள்ள உலகையும் எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படைக் கேள்விகளில் இருந்தே சிந்தனை தொடங்க வேண்டும்.
அதை இப்போதுள்ள தலைமுறையினரிடமிருந்தே தொடங்க வேண்டும். சிறு வயது முதற்கொண்டு மனித மதிப்பு, மாண்பு, வாழ்வியல், எதார்த்தம், வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றைப் புரிந்து கொள்ளும் அளவிற்கு மாணவர்களிடம் ஒரு பக்குவம் உருவாக வேண்டும்.
குறிப்பாக, மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் செயல்பாட்டுக் கல்வியாக, அறவிழுமியங்களைக் கூறும் சமூக நலக் கல்வி அல்லது மதிப்புக் கல்வி ஒன்று இன்றைய சூழலில் அவசியமாக்கப்பட வேண்டும்.
காலம் காலமாக அறக்கதைகள் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் அல்லது ஒரே மாதிரியான அமைப்பில் கற்பிக்கப்பட்டு வந்துள்ளன. ஆனால், இந்த ஒழுக்கக் கல்வி அதுபோல் இல்லாமல், ஒழுக்கம் என்பது ஒரு வார்த்தையாகச் சுருங்காமல், ஒட்டுமொத்த உயிரினங்கள், சுற்றுச்சூழல் மற்றும் மனித வாழ்வின் பரந்த பரிமாணங்களைப் புரிந்து கொள்ளும் வகையில் அமைய வேண்டும்.
இதில் உறவுகள் மிக முக்கியமானவை. தாய், தந்தை, குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆகியோரின் பங்களிப்பையும், உறவுகளின் அருமையையும் உணர்ந்து, அவற்றை வெளிப்படுத்தவும் புரிந்து கொள்ளவும் உதவும் செயல்பாடுகள் இதில் இடம்பெற வேண்டும்.
“நான் யார்? “என்ற கேள்வியை மாணவன் தனக்குள் எழுப்பும் வகையிலும், தன்னை அறிந்து கொள்ளும் வகையிலும் அமைய வேண்டும் என்பதே இதன் அடிப்படை நோக்கமாகும்.
இந்தத் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில் அமையும் சமூக நீதியும் சமத்துவமும் என்ற அடிப்படையில், பாலினப் பாகுபாடின்றி அனைவரையும் சமமாக நடத்துவதும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விளிம்புநிலை மக்களைப் புரிந்து கொண்டு உதவும் உள்ளடக்கிய பார்வையும், சாதி, மத, இனப் பாகுபாடுகளுக்கு எதிரான மனிதநேய சிந்தனையும், “எல்லோரும் ஓர் குலம்” என்ற அடிப்படையில் சக மனிதர்களை மதிக்கும் மனித உரிமைகளும் இதன் முதல் அடித்தளமாகும்.
அடுத்ததாக, சுற்றுச்சூழல் அறத்தின் வழியாக ஏரி, குளம், நதிகள் மற்றும் நிலத்தடி நீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நீர்நிலைப் பாதுகாப்பும், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்க்கும் நெகிழி ஒழிப்பும், மரங்களின் அவசியத்தையும் விலங்குகள், பறவைகள் மீதான கருணையையும் போற்றும் பல்லுயிர் ஓம்புதலும், புவி வெப்பமயமாதல் பற்றிய எளிய புரிதலைத் தரும் பருவநிலை விழிப்புணர்வும் இதில் இடம்பெற வேண்டும்.
மேலும், இன்றைய டிஜிட்டல் யுகத்தில், இணையத்தில் பிறரைத் தரக்குறைவாகப் பேசாமல் இருக்கும் ஆன்லைன் நாகரிகம், போலிச் செய்திகளை அடையாளம் காணும் திறன், ஸ்மார்ட்போன் மற்றும் திரைப் பயன்பாட்டு நேரத்தைக் குறைக்கும் சுயக்கட்டுப்பாடு, இணையச் செயல்பாடுகளுக்குப் பொறுப்பேற்கும் டிஜிட்டல் பொறுப்பு ஆகியவை கற்பிக்கப்பட வேண்டும்.
ஊடகங்களை வெறும் பொழுதுபோக்காகப் பார்க்காமல், விழிப்புணர்வுடன் பகுத்தாய்வு செய்யும் சூழல் உருவாக வேண்டும்.
இதோடு, தன் உடலின் மீதான சுய உரிமை, தொடுதல் பற்றிய புரிதல், வளரிளம் பருவத்தில் ஏற்படும் உடல் மற்றும் மனரீதியான மாற்றங்களை அறிவியல் பூர்வமாகப் புரிந்து கொள்ளுதல், எதிர்பாலினத்தவரின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் பாலியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு ஆகியவை மாணவர்களின் பாதுகாப்பிற்காக இன்றியமையாதவையாகச் சேர்க்கப்பட வேண்டும்.
ஈகை, வாய்மை, விருந்தோம்பல் போன்ற தமிழ் விழுமியங்களையும், திருக்குறள் மற்றும் ஆத்திசூடியின் எளிய வாழ்வியல் விளக்கங்களையும், “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற உலகளாவிய மனப்பான்மையையும் வளர்ப்பதோடு, தோல்விகளையும் ஏமாற்றங்களையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவம், கோபம், பயம், கவலை போன்ற உணர்ச்சிகளைக் கையாளும் திறன், பிறரின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் மனப்பாங்கு மற்றும் சிறு வயது முதலே சேமிப்பின் முக்கியத்துவத்தை அறியும் பண மேலாண்மை போன்ற வாழ்வியல் திறன்களும் இதில் வளர்க்கப்பட வேண்டும்.
மேலும், இன்றைய காலகட்டத்தில் சமூகத்திற்கு மிகப் பெரிய சவாலாக உருவெடுத்துள்ள போதைப்பொருள் மற்றும் அடிமைப்பழக்கங்களின் பாதிப்புகள் குறித்து மாணவர்களிடம் ஆழமான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். போதைப்பொருள் பழக்கம் என்பது ஒரு தனி மனிதனின் பாதிப்பு மட்டுமல்ல; அது அவரைச் சார்ந்த குடும்பம், பிள்ளைகள், உறவினர்கள் மற்றும் ஒட்டுமொத்த சமூக அமைப்பையும் சீர்குலைக்கும் ஒரு சமூகப் பேராபத்தாகும் என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
போதைப்பொருள் பழக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் அனுபவங்கள், மனவேதனைகள் மற்றும் வாழ்வியல் சிக்கல்களை நேரடியாகக் கேட்டு அறியும் கலந்துரையாடல்கள் மற்றும் செயல்முறைப் பயிற்சிகள் மூலம், ஒரு மனிதனின் தவறான தேர்வு எவ்வாறு பலரின் வாழ்க்கையையும் பாதிக்கிறது என்ற சமூகப் பொறுப்புணர்வை மாணவர்களிடம் உருவாக்க வேண்டும்.
இப்படியொரு கல்வி முறையின் கற்பித்தலில் எவ்விதப் பாடப்புத்தகங்களோ, எழுத்துத் தேர்வுகளோ, மதிப்பெண்களோ இல்லாமல், மாணவர்களின் வருகை, ஆர்வம் மற்றும் செயல்பாடுகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். நிஜ உலகச் சிக்கல்களைக் கொடுத்து மாணவர்களையே தீர்வு சொல்ல வைக்கும் விவாத மேடைகள், மாணவர்கள் வெவ்வேறு மனிதர்களாக நடித்துப் பிறரின் கஷ்டங்களைப் புரிந்து கொள்ளும் செயல்முறைகள் மற்றும் அருகிலுள்ள நீர்நிலைகளைப் பார்வையிடுதல், முதியோர் இல்லங்களுக்குச் சென்று உரையாடுதல், மரக்கன்றுகள் நடுதல் போன்ற களப்பணிகள் மூலமே இது நடத்தப்பட வேண்டும்.
இதில் இடம்பெறும் கதைகள் அனைத்தும் மாணவர்கள் ஆர்வத்துடன் புரிந்து கொள்ளும் வகையில், நம் சமூகத்தில் வாழ்ந்து சாதித்த உண்மை மனிதர்களின் கதைகளாக இருக்க வேண்டும். மரம் வளர்ப்பவர்கள், சுற்றுச்சூழலைப் பேணுபவர்கள், வறுமையின் அடித்தட்டிலிருந்து தன் உழைப்பால் முன்னேறிய எளிய கல்வியாளர்கள், அறிஞர்கள், விஞ்ஞானிகள் மற்றும் சமூகச் செயல்பாட்டாளர்கள் போன்ற நிஜ மனிதர்களை அடையாளப்படுத்த வேண்டும்.
இப்படிப்பட்ட தொலைநோக்குப் பார்வையுடன் அமையும் சமூகக் கல்வி, மாணவர்கள் தங்களுடைய நிலை, திறமைகள், ஆற்றல்கள் மற்றும் வாழ்க்கை இலக்குகள் குறித்த தெளிவான புரிதலைப் பெறுவதற்கும், தங்களைத் தாங்களே அடையாளப்படுத்திக் கொள்வதற்கும் உறுதுணையாக அமையும்.
இதுபோன்ற கல்வியை இன்றைய சமூகமும், பெற்றோர்களும், பொதுமக்களும் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த முன்னெடுப்பை ஒரு சமூகப் பொறுப்புணர்வுடன், அரசு மற்றும் மக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் நோக்கில் இந்தப் பதிவை வெளியிடுகிறோம்.
நன்றி.
ஆனந்த்
இன் மீடியா – Wisdom News





