கிறிஸ்தவத்தில் தலித்துகளின் போராட்டம்: ஒரு சமூக அநீதியின் கதை
கிறிஸ்தவ மதம் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் போதித்தாலும், இந்திய கிறிஸ்தவ சமூகத்திற்குள் நிலவும் சாதியப் பாகுபாடு, குறிப்பாக தலித் கிறிஸ்தவர்கள் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறை, இன்னும் ஒரு கசப்பான உண்மையாகவே உள்ளது.
இந்துமதத்தில் இருப்பதை விட கிறிஸ்தவத்தில் சாதியப் பாகுபாடு அதிகமாகவே உள்ளது
என்று பல தலித் கிறிஸ்தவர்கள் உணர்கின்றனர். ஒருபுறம் இந்துமதத்தில் தலித் மக்களுக்கு இடஒதுக்கீடு போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய தலித் மக்களுக்கு அத்தகைய சலுகைகள் மறுக்கப்படுகின்றன. அவர்களின் உரிமைகள் புறக்கணிக்கப்படுகின்றன.
இதனால் அவர்கள் உரிமைகள் மறுக்கப்பட்ட கிறிஸ்தவர்களாகவே வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த அநீதிக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுவது 1950களில் இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை அரசிடம் அளித்த பதிலாகும். அப்போது
“எங்கள் கிறிஸ்தவ சமூகத்தில் சாதி இல்லை, அனைவரும் சமமாக நடத்தப்படுகிறார்கள். எனவே தலித் கிறிஸ்தவர்களுக்கு Reservation தேவையில்லை”
என்று பேரவை தெரிவித்தது. அதற்குப் பதிலாக கிறிஸ்தவ நிறுவனங்களுக்குச் சிறுபான்மையினர் அந்தஸ்து மற்றும் அதற்கான சலுகைகள் வேண்டும் என்று கோரியது. இதன் அடிப்படையில் அரசும் கிறிஸ்தவ சிறுபான்மை சமூகத்துக்குப் பள்ளி, கல்லூரி, மருத்துவமனை தொடங்க உரிமை, Minority Institutions நடத்துவதில் அரசு தலையீடு செய்யாத சுதந்திரம், Grant-in-Aid எனப்படும் அரசு நிதி உதவி, Foreign Funding (FCRA) அனுமதி, பெரிய நிலங்கள் மற்றும் வரிவிலக்கு ஆகிய சலுகைகளை வழங்கியது.
இதன் மூலம் நிறுவனங்கள் வளர்ந்தன, ஆனால் சமூகத்தின் கீழ்தட்டு மக்கள், குறிப்பாக தலித் கிறிஸ்தவர்கள், புறக்கணிக்கப்பட்டனர்.

இன்று வரை கிறிஸ்தவ தலித் மக்களுக்கு கிடைக்காத உரிமைகள் ஏராளம்.
SC Reservation, Scholarships, Promotions மற்றும்
அரசு வேலைவாய்ப்பு ஒதுக்கீடு, Welfare Schemes என அனைத்தும் மறுக்கப்பட்டுள்ளன.
அதாவது, ஹிந்து, சிக், புத்த தலித்திற்கு கிடைக்கும் சலுகைகள் அதே சமூக பின்புலம் கொண்ட கிறிஸ்தவ தலித்திற்கு கிடைக்கவில்லை.
ஆண்டுதோறும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி கருப்பு நாள் என அறிவித்து நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் தலித் கிறிஸ்தவர்களின் பார்வையில் ஒரு கண்துடைப்புச் செயலாக மட்டுமே இருக்கின்றன.
ஏனெனில் இந்த ஆர்ப்பாட்டங்கள் அரசுக்கு எதிராக மட்டும் செல்கின்றன.
ஆனால் திருச்சபையின் சொந்த அநீதியைச் சரிசெய்யும் முயற்சி எதுவும் செய்யப்படவில்லை.
இன்றும் கத்தோலிக்க திருச்சபையால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் அரசு சலுகைகளைப் பெற்று வருகின்றன. ஆனால் தலித் மக்களுக்கு இடஒதுக்கீடு வேண்டாம் என்று கூறி பெற்ற இந்த சலுகைகள் அந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எந்த விதத்திலும் பயன்படுவதில்லை.
குறைந்தபட்சம் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் நியமனத்தில் 20% இடஒதுக்கீடு, அதேபோல் பயிலும் தலித் மாணவர்களுக்கு 20% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது அடிப்படை நீதி.
ஆனால் இன்று வரை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.
திருச்சபையின் உள்ளேயே சாதி கட்டமைப்பு ஆழமாக வேரூன்றி இருப்பது மறுக்க முடியாத உண்மை. பெரும்பான்மை சாதியினரின் உறவினர்கள், நண்பர்கள், சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கே வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. ஆதிக்க சாதியினர் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசு நிதி உதவியில் இயங்கும் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை அபகரிக்கிறார்கள்.
தலித் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். இது மாபெரும் அநீதி.

“ஏழைகளுக்கும் ஒடுக்கப்பட்டோருக்கும் பணி செய்வதுதான் கிறிஸ்துவின் கோட்பாடு” என்று சொல்லும் கத்தோலிக்க திருச்சபை உண்மையில் ஏழை மக்களின் பெயராலும், ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் பெயராலும் அயல்நாடுகளிலிருந்து நிதி உதவி பெற்று வருகிறது. ஆனால் அந்த நிதி அந்த மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த பயன்படுத்தப்படுவதில்லை.
ஏழை மக்களின் பெயரில் பெறப்படும் நிதி, செல்வந்தர்களின் வாழ்க்கை முறையை தாங்கி நிற்கிறது.
மேலும், கிறிஸ்துவின் வழியில் நடப்பதாகக் கூறும் திருச்சபை, இன்று வரை பாதிக்கப்பட்ட மக்களின் குரலுக்கு செவிசாய்ப்பதில்லை.
அநீதிக்கு எதிராக கேள்வி கேட்பவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள், ஒதுக்கப்படுகிறார்கள் அல்லது பதவி நீக்கம் செய்யப்படுகிறார்கள். 21ஆம் நூற்றாண்டுக்கு இந்த அணுகுமுறை செல்லுபடியாகாது.
அதனால் மாற்றம் அவசியம். கத்தோலிக்க திருச்சபை உடனடியாகத் தனது தவறை உணர்ந்து தலித் கிறிஸ்தவர்களுக்கு நீதி வழங்க முன்வர வேண்டும். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் கத்தோலிக்க திருச்சபை மற்றும் துறவர சபைகளில் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களில் அவர்களுக்கு உரிய இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும்.
மக்களை மதத்தைக் கொண்டு அடிமைப்படுத்தும் பிற்போக்குத்தனமான அரசியல் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்.
இது ஒரு பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ மக்களின் குரல்.
இயேசுவின் உண்மையான வழியில் நடக்க வேண்டும் என்றால், திருச்சபை முதலில் தனது சொந்த வீட்டை சுத்தப்படுத்த வேண்டும். இல்லையேல் மக்கள் திருச்சபையை புறக்கணிப்பார்கள்.
✍️ R. Roy




