கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின்படி, இந்த ஆண்டு தனியார் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் நடவடிக்கை முடிந்திருக்க வேண்டிய சூழ்நிலையில், தமிழகத்தில் இதற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பையே தமிழக அரசு இதுவரை வெளியிடவில்லை.
இதுதொடர்பான வழக்கின் விசாரணையில், இந்த ஒதுக்கீட்டில் சேரும் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தை பள்ளிகளுக்குச் செலுத்துவதில், மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதலே இதற்குக் காரணமெனத் தெரியவந்துள்ளது.
கடந்த 4 ஆண்டுகளாக இந்த சட்டத்தின்படி சேர்க்கப்படும் குழந்தைகளுக்காக பள்ளிகளுக்கு வழங்கப்படும் நிதியில் 60 சதவீதத் தொகையை மத்திய அரசு கொடுக்கவில்லையென்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திடாததால் தான் நிதி ஒதுக்கவில்லை என்று மத்திய அரசு இதற்கு பதிலளித்துள்ள நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கும் இடமளிக்கும் வகையில், கடந்த 2009ஆம் ஆண்டில் இந்தியாவில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 (The Right of Children to Free and Compulsory Education Act, 2009) கொண்டு வரப்பட்டது.
அதற்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் தேதியிலிருந்து நடைமுறைக்கு வந்த இந்த சட்டத்தின்படி, நாடு முழுவதும் உள்ள அனைத்துத் தனியார் பள்ளிகளிலும் பாலர் வகுப்பிலிருந்து (LKG) எட்டாம் வகுப்பு வரை, மொத்தமுள்ள மாணவர் சேர்க்கையில் 25 சதவீதத்தை ஏழை மாணவர்களுக்கு இடங்களை இலவசமாக ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்பது கட்டாயமாக்கப்பட்டது.
இந்த மாணவர்களுக்கான கட்டணத்தை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மாநில அரசு வழங்கும். இந்தத் தொகையில் எவ்வளவு தொகையை வழங்கலாம் என்று மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வாரியம் தான் (PAB-Project Approval Board) ஒப்புதல் அளிக்க வேண்டும். அவ்வாறு அனுமதிக்கப்படும் தொகையில் 60 சதவீதத் தொகையை மத்திய அரசு வழங்கும்