தைத்திருநாள்: ஒரு அறிவியல் மற்றும் மரபு வழித் தேடல்
தமிழர் மரபில் பொங்கல் திருநாள் என்பது வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல, அது இயற்கையுடனான நம் உறவைப் புதுப்பிக்கும் ஒரு உன்னத நிகழ்வு. ஆனால், காலப்போக்கில் இந்தப் பண்டிகையின் உண்மையான பின்னணியைத் தவறவிட்டு, அதன் சடங்குகளை மட்டும் நாம் பின்பற்றத் தொடங்கிவிட்டோம்.
உண்மையில் நாம் ஏன் இந்தத் தைத்திருநாளைக் கொண்டாட வேண்டும்? கதிரவனுக்கும் நமக்கும் உள்ள பிணைப்பு என்ன? என்பதை மீண்டும் ஒருமுறை ஆழமாகச் சிந்தித்து, நம் பாரம்பரியத்தை உயிர்ப்பிக்க வேண்டிய தருணம் இது. அதைப்பற்றிய பார்வையை இங்கே காண்போம்.
அண்டவெளியின் ஆதிமூலமான கதிரவனின் பேரொளி என்பது வெறும் வெளிச்சம் மட்டுமல்ல; அது மானுட உடலெங்கும் பாய்ந்து மகா சக்தியாக உருவெடுக்கும் ஒரு பிரபஞ்ச ஆற்றல். பூமி சூரியனைச் சுற்றி வரும் பாதையில், தை மாதம் என்பது சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கித் தனது பயணத்தைத் தொடங்கும் ‘உத்தராயண’ காலத்தின் ஆரம்பம். இது பகல் பொழுது அதிகமாகவும், குளிர் குறைந்து வெப்பம் சீராகத் தொடங்கும் காலமாகவும் இருப்பதால், புதிய தொடக்கத்திற்கு இதுவே சிறந்த நேரமாகத் தமிழர்களால் கருதப்பட்டது.
அறிவியல் ரீதியாகப் பார்த்தால், சூரிய ஒளிதான் உலகின் முதல் உணவு. தாவரங்கள் சூரிய ஒளியைப் பெற்று ஒளிச்சேர்க்கை மூலம் அதை மாவுச்சத்தாக மாற்றுகின்றன. அந்தச் சூரிய ஆற்றல்தான் நெல்லாகவும், கரும்பாகவும் நமக்குக் கிடைக்கிறது. நாம் உண்ணும் ஒவ்வொரு பருக்கைச் சோறும் உண்மையில் மாற்றமடைந்த சூரிய ஆற்றலே ஆகும். அந்த நன்றியைத் தெரிவிப்பதே பொங்கல். பண்டைய தமிழ்ச் சமூகம் விவசாயத்தைச் சார்ந்தது. மழையும், நிலமும் இருந்தாலும் கதிரவனின் வெப்பம் இல்லையெனில் பயிர்கள் முதிர்ச்சியடையாது. அறுவடைக்குத் துணை நின்ற கதிரவனுக்கு, அந்த அறுவடையின் முதல் பலனை வைத்துப் படைப்பது ஒரு கடமையாகப் பார்க்கப்பட்டது.
இப்படியாக, அறிவியல் ரீதியாகவும் நம்முடைய பண்பாட்டு ரீதியாகவும் இயற்கை நம்மோடு இரண்டறக் கலந்திருக்கிறது. சூரியனின் ஆற்றல் நம் உணர்வுகளோடும், நம் உடலில் உள்ள செல்களோடும், மகிழ்ச்சியைத் தூண்டும் ஹார்மோன்களோடும் நேரடித் தொடர்பு கொண்டது. இயற்கையின் இந்த மாபெரும் சக்தியை உணர்ந்து, அதன் முக்கியத்துவத்தை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவது நமது தலையாய கடமையாகும்.
இந்தத் தைத்திருநாள் கொண்டாட்டம், அந்தப் பொறுப்பை நாம் உணர்ந்து செயல்படுவதற்கான ஒரு தொடக்கமாக அமையட்டும்.
அன்புடன், ஆனந்த்





