“மக்களின் பகுத்தறிவு சிந்தனையை மழுங்கடிக்கும் அரசியல் சூழ்ச்சிகள்”
தற்போதைய தமிழக அரசியல் சூழல், குறிப்பாக கரூரில் தா.வே.க நடத்திய பொதுக்கூட்டத்தில் அரங்கேறிய துயரச்சம்பவம் மற்றும் அரசு நடவடிக்கைகள் குறித்த விவாதங்கள், மக்களின் மன அழுத்தத்தை ஆழப்படுத்துகின்றன. நடிகரின் அரசியல் பிரவேசத்திற்கான ஆதரவு அல்லது அரசின் நிலைப்பாட்டிற்கு எதிரான விமர்சனம் எனப் பரவலான விவாதங்களில் மூழ்கியிருக்கும் மக்கள், தங்கள் நடுநிலையான சிந்தனையை இழந்து, உணர்ச்சிவசப்பட்ட மனநிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இந்தக் குறுகிய கால உணர்ச்சி மோதல்கள், மக்களின் உளவியல் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதையும், நாம் எத்தகைய பார்வையை முன்னெடுக்க வேண்டும், என்று ஆராய்கிறது இந்த பதிவு.
அரசியல் மேடைகளிலும் சமூக ஊடகங்களிலும் நடக்கும் விவாதங்கள், பெரும்பாலும் உண்மைக்கு அப்பாற்பட்ட சூழ்ச்சிகளையும், ஆதாய நோக்கிலான பேச்சுக்களையும் உள்ளடக்கியவை. இவர்கள் இன்றைய சூழலுக்கு ஏற்ப ஒருவிதமாகவும், நாளை வேறு விதமாகவும் பேசக்கூடியவர்கள். இந்த நிலையற்ற தன்மை, மக்களிடம் ஒருவித உளவியல் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
இந்த உளவியல் தாக்கம், மக்களைத் தங்கள் கடந்த கால அரசியல் அனுபவங்களை மறக்கச் செய்கிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடர்பான விவகாரங்களே மிகச் சிறந்த உதாரணம்.
ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், அவரது சொத்துக்கள் மற்றும் நிர்வாகம் குறித்து ஊடகங்களில் கடுமையான அவதூறுகளும், எதிர்மறையான பார்வைகளும் பரவலாகப் பேசப்பட்டன. அனேக சொத்துக்களைச் சேர்த்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இருப்பினும், அடுத்தடுத்த தேர்தல்களில் மக்கள் அந்தக் குற்றச்சாட்டுகளைப் புறக்கணித்து அல்லது மறந்துவிட்டு அவரை மீண்டும் வெற்றிபெறச் செய்தனர்.
அதைப்போல் ஈழத் தமிழரின் போர் அழிவுக்கு திமுக போதிய குரல் கொடுக்கவில்லை என வைகோ, திருமாவளவன் மற்றும் திராவிட இயக்கங்கள் எனப் பலரும் அப்போதைய முதல்வர் கலைஞருக்கு எதிராக நின்றனர். காங்கிரஸ் கூட்டணியை ஒழித்துக்கட்டவும் முழங்கினர். ஆனால், அடுத்த தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. அரசியல் களங்கள் மாறும், சூழ்ச்சிகளும் இருக்கும். மக்கள் கூர்ந்து கவனித்து, உடனே முடிவெடுக்காமல், புரிதலோடு தெளிந்த பார்வையுடன் செயல்பட வேண்டும்.
அரசியல் தலைவர், ஊடகவியலாளர், ‘நடுநிலையாளர்’ பேசுவது நேர்மையானதா அல்லது ஆதாய நோக்கம் கொண்டதா என்பதை அறிய, அவர்களுடைய முந்தைய பதிவுகளை (Past Statements) ஆராய வேண்டும். இன்று நீதிக்காகப் பேசுபவர், கடந்த காலத்தில் அநியாயத்திற்கு ஆதரவு அளித்துள்ளாரா?
இவர்கள் எப்போது நடுநிலையாகப் பேசுகிறார்கள்?
என்ற கேள்விகளை எழுப்புவதே சரியான பார்வையாக இருக்கும்.

தங்களை சமூக ஆர்வலர்கள் எனச் சொல்லிக்கொள்பவர்கள், அல்லது ஊடகங்களில் குரல் கொடுப்பவர்கள், பல சமயங்களில் பணத்திற்காகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தின் தீவிர பற்றின் காரணமாகவோ இயங்குகிறார்கள். இவர்களுடைய பதிவுகள், மக்களைத் திசை திருப்பும் நோக்கத்துடனே வடிவமைக்கப்படுகின்றன. மக்கள் எப்படிச் சிந்திக்க வேண்டும், எதைச் சிந்திக்க வேண்டும் என்பதை இவர்களே தீர்மானிக்கும் சக்திகளாக மாறிவிட்டார்கள்.
மக்களுக்கு ஒரு நடுநிலையான அரசியல் சூழலைப் புரியவைக்கவோ, அதை உருவாக்கவோ இவர்களின் பெரும்பாலான பதிவுகள் உதவுவதில்லை. மாறாக, அவர்களின் ஒரு சார்புப் போக்கு, மக்கள் மனதில் மேலும் குழப்பத்தையே ஏற்படுத்துகிறது. இவர்கள் ஏன் நடுநிலையாகப் பேச மறுக்கிறார்கள், அல்லது பேசவில்லை என்பதை நாம் அவர்களுடைய முந்தைய மற்றும் தற்போதைய பதிவுகளை ஒப்பிட்டுப் பார்த்தால் எளிதில் விளங்கிக் கொள்ளலாம்.

பேசுபவர்களையோ, அரசியல் ஆதாயத்திற்காகச் செயல்படுபவர்களையோ நம்பி நாம் எந்த ஒரு முடிவையும் ஒருபட்சமாகவோ, ஒரு சார்பாகவோ எடுக்க முடியாது. எது உண்மை, எது பொய் என்பதைத் தீர்மானிக்க, நாம் கேட்டதையும், பார்த்ததையும் நம்முடைய பகுத்தறிவுக் கண்ணாடி மூலம் பகுத்துப் பார்க்க வேண்டும்.
இன்று உண்மைக்காகச் சிறையில் வசிப்பவர்களும் உண்டு; அநீதிகளைச் செய்து நாட்டில் நீதிமான்கள் போல் வாழ்பவர்களும் உண்டு. எனவே, நம்முடைய சுய அடையாளத்தையும், சுய சிந்தனையையும் இழக்காமல், பொறுப்பற்ற சிந்தனைக்கு ஆதரவளிக்காமல், எது சமூக நீதிக்கு நல்லது என்ற அடிப்படையில் முடிவெடுப்பதே சரியான தீர்வாகும்.
நாம் எடுக்கும் முடிவுகள் நமக்கும், நம் அடுத்த தலைமுறைக்கும் ஒரு நல்ல வழிகாட்டியாக அமையட்டும்…





