தற்கால மனிதனும் கற்கால மூளையும்: பயம் அறிவியல் விதி
Modern Man and the Stone Age Brain: The Scientific Law of Fear – Wisdom News – Anand
நம் மனதில் எப்படி பய உணர்வு ஏற்படுகிறது என்பது நாம் என்றாவது யோசித்து இருக்கிறோமா? அல்லது நமக்கு ஏன் இந்த பய உணர்வு வருகிறது என்று நாம் சிந்தித்தது உண்டா?
ஒரு சிறிய உதாரணம்:
இரவு நேரத்தில் தனியாக நடந்து வரும் கவிதா, பின்னால் ஒரு நபர் வேகமாக நடந்து வரும் சத்தத்தைக் கேட்டுப் பெரும் அச்சமடைகிறாள். அங்கே நிஜத்தில் எந்த ஆபத்தும் இல்லை, அந்த நபர் தன் சொந்த அவசர வேலைக்காகவே பேருந்தைப் பிடிக்க வேகமாகச் செல்கிறான். ஆனால், அங்கே ஆபத்து இல்லை என்று அவளது பகுத்தறிவுக்குத் தெரிவதற்கு முன்பே, அவளது அடியாழத்தில் இருந்து ஒரு தாள முடியாத பய உணர்வு கிளம்பி அவளது ஒட்டுமொத்த உடலையும் ஆட்கொள்கிறது.
இந்த பய உணர்வு அவளது தனிப்பட்ட எண்ணம் அல்ல. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு காடுகளில் வாழ்ந்த ஆதி மனிதன், தன்னைச் சுற்றியிருந்த கொடூரமான காட்டு மிருகங்களைக் கண்டு அடைந்த அதே பய உணர்வின் நேரடித் தொடர்ச்சிதான் இது. காட்டில் மிருகங்களை எதிர்கொண்டபோது உயிர் பிழைப்பதற்காக ஆதி மனிதனுக்குள் உருவான அந்த அச்சுறுத்தலின் அதிர்வுகள், அவனது உயிரணுக்களில் கலந்து, வேதியியல் பதிவுகளாகத் தலைமுறை தலைமுறையாக இன்று நமக்குள் கடத்தப்பட்டிருக்கின்றன. மனித மனதின் இந்த விந்தையைத் தான் நவீன அறிவியல் உலகம் ” பரிணாம உளவியல்” (Evolutionary Psychology)
என்று அழைக்கிறது.
இதனைத்தான் நவீன நரம்பியல் மற்றும் பரிணாம உளவியல் ஆய்வாளர்கள் ஆதாரப்பூர்வமாக விளக்குகிறார்கள். மனிதன் எதற்கெல்லாம் பயப்பட வேண்டும் என்ற பட்டியலோடு பிறப்பதில்லை. மாறாக, நம் மூளையின் நடுப்பகுதியில் இருக்கும் ‘அமிக்தலா’ (Amygdala) என்ற உயிரியல் அலாரம் பிறக்கும்போதே நமக்குள்ளே இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது.
சூழல் சட்டென்று மாறும்போது, இந்த அலாரம் தன்னிச்சையாக அடித்து உடலில் பய உணர்வைத் தூண்டுகிறது. லீடா காஸ்மிட்ஸ் மற்றும் ஜான் டூபி போன்ற புகழ்பெற்ற வல்லுநர்கள் கூறுவது போல, நமது நவீன மண்டையோட்டிற்குள் இருப்பது இன்னும் அந்த ஆதி மனிதனின் கற்காலத்து மூளைதான்.
இன்றைய நவீன மனிதர்கள் ஒரு மூடிய அறைக்குள்ளும், ஸ்மார்ட்போன் திரைக்குள்ளும் தங்களின் ‘பாதுகாப்பு வளையத்தை’ (Safety Zone) சுருக்கிக் கொண்டனர். இதனால் இயற்கையான சூழல்களையும், திடீர் மாற்றங்களையும் எதிர்கொள்ளும் பக்குவத்தை நம் மூளை காலப்போக்கில் இழந்துவிடுகிறது. எப்போதுமே ஒரு செயற்கையான பாதுகாப்பிற்குள் பழகிவிட்டதால், ஒரு சிறிய சுற்றுச்சூழல் மாற்றம் கூட மூளைக்கு ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தலாகத் தெரிந்து, இந்த பய உணர்வு இன்று ‘நிரந்தர பதட்டமாக’ (Chronic Anxiety) மாறிவிடுகிறது என்று சமூக உளவியலாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
நம் உடலின் இந்த உயிரியல் அமைப்பையும், அதற்குப் பின்னால் இருக்கும் ஆதி மனிதனின் பரிணாம உளவியலையும் நாம் சரியாகப் புரிந்து கொண்டால், நமக்குள்ளே எழும் தேவையற்ற கற்பனைப் பயங்கள் காலப்போக்கில் தானாகவே மறையத் தொடங்கும்.
நம்முடைய நரம்பு மண்டலத்தோடு பிணைக்கப்பட்டுள்ள இந்த ஆதி பய உணர்வை நம்மால் ஒட்டுமொத்தமாக அறவே ஒழித்துவிட முடியாது என்பது உண்மைதான்.
ஆனால், பயத்திற்கு அடிமையாகாமல் இருக்க, பயமான விஷயங்களைத் தைரியமாக எதிர்கொள்ளவும், அதைப் பற்றிப் பேசவும், அதை நோக்கிச் சிந்திக்கவும் தொடங்க வேண்டும்.
பயத்தைக் கண்டு ஓடாமல் அதை நேருக்கு நேர் எதிர்கொள்ள வேண்டும். எப்போதும் நம்முடைய மனதை தைரியமாக, தைரிய உணர்வோடு வைத்துக்கொள்ள தேவையான பயிற்சிகளை நாம் அன்றாடம் மேற்கொள்ள வேண்டும். அதுவே இந்த கற்கால மூளையின் கற்பனைப் பயங்களிலிருந்து தற்கால மனிதன் முழுமையாக விடுதலை பெற்று, மனதை உறுதியாக மாற்றுவதற்கான உண்மையான அறிவியல் தீர்வாகும்.
Wisdom News




