“முன்மாதிரி இழந்த சமுதாயத்தில் திசைதேடும் இளைஞர்களின் எழுச்சி”
“பெரியாரின் மாற்றம் போல் — இன்றைய இளைஞர் அரசியல் எழுச்சி ஒரு தொடக்கம்”

இன்றைய அரசியல் களத்தில் புதிய அடையாளத்துடன் காலடி எடுத்து வைக்கும் இளைஞர்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. “இவர்கள் அரசியல் புரிதல் இல்லாதவர்கள்”, “அவர்களின் பிரவேசம் பழைய தலைமுறையை குழப்புகிறது” என்ற பழைய மனப்போக்குகள் இன்னமும் நிலவுகின்றன. இளைஞர்களை குறை சொல்லுவதற்கு முன், அவர்களின் அரசியல் ஆர்வத்தையும் சமூகப் புரிதலையும் ஆராய்ந்து அறிய வேண்டும்.
இளைஞர்கள் இன்று வெறும் ஆதரவாளர்கள் அல்ல — அவர்கள் நாளைய சமூக வடிவமைப்பாளர்கள். அதனால், மூத்த தலைமுறையினர் அவர்களுக்கு வழிகாட்டிகளாக இருக்க வேண்டும். குறை கூறுவோராய் அல்ல, நெறி காட்டுவோராய். ஆனால் நெறி காட்டும் சூழல் தானே இப்போது மறைந்துள்ளது.
அரசியலைப் புரிந்து கொள்ள முயலும் இளைஞர்கள், உண்மையில் அந்த வெற்றிடத்திற்குள் புதிய தேடலாக, புதிய நோக்கத்துடன் செல்வதுதான் அவர்களின் இன்றைய அரசியல் பயணம்.

இளைஞர்களுக்கு அரசியல் புரிதல் இல்லை இளைஞர்களைக் கொச்சைப்படுத்துவது ஏன்?
இளைஞர்கள் அவர்கள் தங்கள் சுய புரிதலின் அடிப்படையிலேயே அரசியல் முடிவுகளை எடுக்கிறார்கள்.
ஜல்லிக்கட்டுப் போராட்டம் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டங்களை வெற்றிபெறச் செய்ததன் மூலம், இன்றைய இளைஞர்கள் தங்கள் ஆற்றலையும், சமூக அக்கறையையும் நிரூபித்துள்ளனர்.
இளைஞர்களைக் கொச்சைப்படுத்துவதை முதலில் நிறுத்த வேண்டும்.
இன்றைய இளைஞர்களின் பார்வைக்கு, தற்போதுள்ள அரசியல் தலைவர்கள், சித்தாந்தவாதிகள், மற்றும் ஊடகங்கள் முன்மாதிரியாக இல்லை என்பதே உண்மை.
அரசியல் தலைவர்கள் இன்று ஒரு நிலைப்பாடு, நாளை ஒரு கூட்டணி என்று நிலைப்பாடற்ற அரசியலை முன்னெடுக்கிறார்கள்.
சித்தாந்தம் பேசுபவர்களும், சமூகநீதியை மையமாகக் கொண்ட கட்சிகளும் தங்கள் கொள்கையின்படி நடப்பதில்லை.
மேலும், ஊடகவியலாளர்கள் தங்கள் நடுநிலைத் தன்மையையும் அறத்தையும் இழந்து, ஒரு சார்பு நிலைப்பாட்டில் செயல்படுகிறார்கள்.
பணம் மற்றும் செல்வாக்குக்கு ஆதரவாகப் பேசுவதும், நேர்மையான வாதங்களைத் தவிர்க்க முற்படுவதும் இளைஞர்கள் மத்தியில் நம்பகத்தன்மையை இழக்கச் செய்துள்ளது.
இப்படித், முன்மாதிரியாக இருக்க வேண்டியவர்களே ஒழுக்க நெறியின்றிச் செயல்படும்போது, இளைஞர்கள் தங்களுக்குப் புரிந்த வழியில் அரசியல் முடிவுகளை எடுப்பது இயல்புதான்.
இந்த இளைஞர்களைப் பார்த்து, “அரசியல் புரிதல் இல்லை” என்று சாடுவது பகுத்தறிவற்ற செயலாகும்.
இவர்களை விமர்சிப்பதற்கு முன், விமர்சகர்கள் தங்கள் அரசியல் நேர்மையையும், ஒழுக்க நெறியையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். கடந்த தலைமுறையினர் வகுத்த பாதையிலேயே இளைஞர்கள் பயணிக்கிறார்கள்.
இளைஞர்களின் இந்த அரசியல் பாதையை, முன்மாதிரியை இழந்த அரசியல் தலைவர்கள் விமர்சிப்பதில் எந்தத் தார்மீக உரிமையும் இல்லை.
இன்றைய இளைஞர்களின் அரசியல் மற்றும் சமூகப் பாதையில் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டு வருவது ஒட்டுமொத்த சமூகத்தின் கூட்டுப் பொறுப்பாகும்.
இந்த மாற்றத்தை உருவாக்க, அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.
அரசு, ஊடகங்கள், மற்றும் அரசியல் தலைவர்கள்: நேர்மையான, மக்களுக்கான அறம் சார்ந்த அரசியலை முன்னெடுத்து, நிர்வாகத்திலும் செயல்பாட்டிலும் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர வேண்டும்.
ஊடகங்கள் நடுநிலையுடனும், உண்மையான விழிப்புணர்வுடனும் செயல்பட வேண்டும்.
நடிகர்கள் அரசியலுக்கு வரும்போது இளைஞர்களுக்கு ஒழுக்க நெறி சார்ந்த சித்தாந்தத்தை கற்றுத் தர வேண்டும்.
திரைத்துறையினர்: இளைஞர்களின் சிந்தனையைச் சீரழிக்காத, சமூகப் பொறுப்புள்ள திரைப்படங்களை உருவாக்க வேண்டும்.
பெற்றோர்கள், ஆசிரியர்கள், மற்றும் கல்வி நிறுவனங்கள்: இளைஞர்களுக்கு அரசியல் புரிதலையும், சமூக நீதியையும், ஒழுக்க நெறி சார்ந்த சித்தாந்தத்தையும் கற்றுக்கொடுத்து, அவர்களுக்கான வழித்தடத்தை உருவாக்கி, போட்டித் தேர்வுகளுக்கான வகுப்புகள் போன்றவற்றை ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு பெற்றோர், ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் இளைஞர்களின் கேள்வி கேட்பதற்கான உரிமையை பாதுகாப்புடன் வழங்கி, வழிகாட்டும் போது மட்டுமே, இளைஞர்களின் அரசியல் புரிதலும், சமூக அக்கறையும் தெளிவடைந்து, அவர்களுக்கு முன்னோடியான பார்வையும், மாற்றத்திற்கான சக்தியும் கிடைக்கும்.
ஆரம்ப காலத்தில் பெரியார் மதவாதியாக இருந்து காலப்போக்கில் தன்னை மாற்றிக் கொண்டதைப் போல, இன்றைய இளைஞர் எழுச்சி, மாற்றத்திற்கான தொடக்கம் என்பதை நாம் உணர்ந்து, அவர்களுக்கு வழிகாட்டுவதே நம் கடமை.





