கடவுளின் அவதார காலம்?
ANAND WISDOM NEWS
ஒரு ஊர். பரந்து விரிந்த நிலப்பரப்பு, விண்ணைத் தொடும் மலைகள், அடர்ந்த காடுகள், கொழிக்கும் செடி கொடிகள் என அளப்பரிய இயற்கைச் செல்வமும் செழிப்பும் கொட்டிக்கிடந்த ஒப்பற்ற பூமி அது. அங்கே பல்வேறு துறை சார்ந்த மனிதர்கள் ஒன்றாக வாழ்ந்து வந்தார்கள். மத ரீதியான சிந்தனை உடையவர்கள், ஆன்மீகவாதிகள், ஜோதிடக் கலை தெரிந்தவர்கள், வானியலைக் கணிக்கும் திறன் படைத்தவர்கள் எனப் பலதரப்பட்ட அறிஞர்களும் சாமானியர்களும் அந்த மண்ணில் அங்கம் வகித்தார்கள்.
ஆனால், அந்த ஊரின் செல்வமும் செழிப்பும் அதிகரிக்கத் தொடங்கியபோதே, மனிதர்களுக்கு இடையே மெல்ல மெல்ல பிரிவினையும் முளைவிடத் தொடங்கியது. “யாருக்கு அதிக அதிகாரம்? யார் பெரியவர்?” என்ற அகந்தையும் பாகுபாடும் சமூகத்தில் பரவியது.
அதன் விளைவாக, தங்களுக்குள் இருந்த சில இனக்குழுக்களையும் மனிதர்களையும் ‘அடிமைகள்’ என்று முத்திரையிட்டுத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள். மனிதனை மனிதனே அடிமைப்படுத்தும் அந்த நச்சுப் புத்திதான் தங்கள் பேரழிவின் முதல் புள்ளி என்பதை உணராமல், அதைத் தங்களின் மேலாதிக்கமாக எண்ணிக்களித்தார்கள்.
நாட்கள் நகர நகர, மனித உறவுகளின் மாண்பும் நெறிகளும் மறையத் தொடங்கின. கலாச்சாரத்திலும் பண்பாட்டிலும் மட்டுமே அளவுக்கு அதிகமான ஈர்ப்பு கொண்டு, அதை வழிபாட்டுக்குள்ளும், வழிபாட்டைக் கலாச்சாரத்துக்குள்ளும் பிணைத்து ஒரு இறுக்கமான வாழ்வியல் கூண்டை அமைத்துக் கொண்டார்கள்.
காற்றும், மழையும், கடலின் சீற்றமும் இயற்கையின் இயல்பான ஆற்றல்கள் என்பதை அறிவாார்ந்த முறையில் புரிந்துகொள்ளும் தெளிவு அவர்களிடம் இருக்கவில்லை. இயற்கையைக் கண்டு பயந்தபோதெல்லாம், அந்தப் பயத்தை மறைக்கவும் தங்களைத் தற்காத்துக் கொள்ளவும் அவர்கள் கையில் எடுத்த ஒரே ஆயுதம் மதம் மட்டுமே. இயற்கையை இயற்கையாக உணரும் ஆற்றலை இழந்து, பயத்தின் காரணமாக மூடநம்பிக்கைகளிலும் பாரம்பரியச் சடங்குகளிலும் தங்களை முழுமையாக மூழ்கடித்துக் கொண்டார்கள்.
அந்த மூடத்தனத்தின் நிழலில், பெண்களை அடிமைப்படுத்துவதும், மேலோர்-கீழோர் என்ற சாதிய, இனக் கட்டமைப்புகளை இன்னும் தீவிரமாக இறுக்குவதும் அரங்கேறியது.
உழைத்து வாழும் மனமின்றி, போதை கலாச்சாரத்தில் மூழ்கி, எல்லை மீறிய ஆடல் பாடல் கூத்துகளில் தங்களை மறந்து தொலைத்தார்கள். பாலியல் மோகத்தை ஒரு போதையாகவே மாற்றி, நாளடைவில் அது பலவிதமான பாலியல் வன்மங்களாக உருவெடுத்தது. தங்களைச் சுற்றியிருந்த மாபெரும் வளங்களையும் இயற்கை ஆற்றல்களையும் மறந்து, கலாச்சார மோகத்திலும், மத மயக்கத்திலும், மது-மாது போதையிலும் மூழ்கிக் கிடந்து, வளம் கொழித்த அந்த பூமியை மெல்ல மெல்ல வறண்ட பாலையாக்கினார்கள்.
சூழல் வறட்சியடைந்து பஞ்சம் சூழ்ந்தபோது, அங்கிருந்த மதக் கோட்பாட்டு அறிஞர்களும் போதகர்களும் மக்களின் இந்த அச்சத்தையும் அறியாமையையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். “நமக்காக ஒரு தேவதூதன் வருவான்; நம் எல்லாரையும் காக்க ஒரு மாபெரும் தலைவன் உதிப்பான்” என்ற போலிச் சிந்தனையையும் கோட்பாட்டையும் மக்கள் மனதில் ஆழமாக விதைத்தார்கள்.
“கடவுள் நமக்காக ஒரு மீட்பரை அனுப்புவார்” என்ற இந்த போதனையை மூடத்தனமாக நம்பிய மக்கள், தங்கள் சொந்த உழைப்பையும் பொறுப்பையும் முற்றிலும் கைவிட்டு, இன்னும் ஆழமான சோம்பேறித்தனத்திற்குள்ளும் செயலின்மைக்குள்ளும் தள்ளப்பட்டார்கள். தங்களின் சுய உழைப்பின்மையினாலும் இயற்கையை பாதுகாக்க மறந்த பொறுப்பற்றநிலையினாலும்
வந்த வறட்சியை ‘தெய்வக் குற்றம்’ என்றும் ‘கடவுளின் சோதனை’ என்றும் சொல்லி, மீண்டும் மீண்டும் மதக் கோட்பாடுகளுக்குப் பின்னாலேயே ஒளிந்துகொண்டார்கள்.
”இந்த பூமி நமக்கு நிரந்தரமில்லை; நாம் போகப்போவது வேறொரு உலகம்; எனவே இந்த உடலையும் வளங்களையும் பேணி உழைப்பதில் எந்தப் பயனுமில்லை” என்ற சிந்தனையோடு, அந்தப் போலித் தேவதூதனின் வருகைக்காகத் தலைமுறை தலைமுறையாகக் காத்துக்கிடந்தார்கள்.
தாத்தா காலத்திலிருந்து பேரன்கள் வரை அனைவரும் கைகளைக் கட்டிக்கொண்டு அந்த மீட்பனுக்காகக் காத்திருந்து தங்களின் ஒட்டுமொத்த இளமையையும், வாழ்நாளையும், அறிவையும் தொலைத்தார்கள். எதையோ தேடித் துறவறம் பூண்டும், முனிவர்களாகவும் சித்தர்களாகவும் மாறியும், காடுகளிலும் மலைகளிலும் அலைந்து திரிந்து, இறுதியில் வெறுமையோடு மடிந்து போனவர்கள் அங்கே அனேகம் பேர்.
அந்த மாயத் தேவதூதனுக்காகக் காத்திருந்து காத்திருந்தே தங்கள் வாழ்வைத் தீர்த்துக் கொண்டவர்களின் எலும்புகள்தான் அங்கே மிஞ்சினவே தவிர, அந்தத் தேவதூதனும் வரவில்லை, அவர்களின் வாழ்வில் எந்த மாற்றமும் நிகழவில்லை.
இது ஏதோ ஒரு குறிப்பிட்ட ஊரில் மட்டும் நடந்த கதையல்ல; வரலாற்றில் நாம் படித்த அத்தனை நாகரிகங்களின், நாடுகளின் வீழ்ச்சிக்கும் பின்னணியில் இருந்த கசப்பான உண்மை இதுவே.
வரலாறு நெடுகிலும் எத்தனையோ தலைவர்களும், ‘மனுஷகுமாரர்கள்’ என்று தங்களைச் சொல்லிக்கொண்ட தேவதூதர்களும் வந்துபோய்விட்டனர். ஆனால், அவர்கள் சென்ற பிறகும் சமூகம் ஏன் இன்னும் அதே இழிவு நிலையிலும் அடிமைச் சுழலிலும் உழன்று கொண்டிருக்கிறது?
இன்றும் மக்கள் தங்கள் விடுதலைக்கான அதிகாரத்தைத் தாங்களே கையில் எடுப்பதற்குப் பதிலாக, மறுபடியும் இன்னொரு தனிநபரின் மீது தங்கள் நம்பிக்கையைத் திணித்துவிட்டு வேடிக்கை பார்க்கத் தொடங்கிவிடுகிறார்கள்.
”யாரோ ஒரு மாயத் தேவதூதன் வந்து நம்மைக் காப்பாற்றுவான்” என்ற அந்தப் பொய்யான கோட்பாட்டை இந்த மானுட சமூகம் இன்றும் இந்த கோட்பாட்டை சுமந்து வருகிறது.
இந்த மாய கோட்பாட்டை முற்றிலுமாக களைந்தெறிய வேண்டும். தலைவனுக்கான தேடல் என்பது வெளியில் இல்லை; அது நம்மிலிருந்து, நமது சொந்தக் கேள்விகளிலிருந்தே தொடங்க வேண்டும். “யாரோ ஒருவர் அல்ல; நாமே அந்த மீட்பன்! நம்மைச் சார்ந்த குடும்பமும் மக்களும் இணைந்த கூட்டுச் செயல்பாடே இந்தச் சமூகத்தின் ஒடுக்குமுறையை உடைத்தெறியும் ஒரே வழி” என்ற சுயபொறுப்பை ஏற்கும் நாள்தான் உண்மையான விடுதலை மற்றும் மானுட வளர்ச்சியின் தொடக்கமாகும்.





