”தண்டகாரண்யம் – யாரும் சொல்லாத மலைவாழ் வாழ்வியல், மறைக்கப்பட்ட அரசியல் சூழ்ச்சி”
‘தண்டகாரண்யம்’ – மலைவாழ் மக்களின் வாழ்வியலை மட்டும் அல்ல, இந்திய அரசியல், காவல்துறை சதித்திட்டங்களின் இருள்மயமான பக்கம் வரை சென்று பேசும், யாரும் எளிதில் சொல்லத் துணியாத ஒரு சமூக-அரசியல் படம். இயக்குநர் ஆதிரை உருவாக்கிய இந்த படம், சினிமா எனும் கற்பனையின் எல்லையை மீறி, ஒரு வாழ்வியல் அறிக்கையாக நம்மை நிமிர வைத்துக் கொண்டிருக்கிறது.
கதையின் குருதி
படத்தின் மையத்தில் நிற்பவர் கலையரசன். மலைப்பகுதியில் வனத்துறையில் தற்காலிகப் பணியில் அவர் நேர்மையோடு உழைக்கிறார். ஆனால், நில அபகரிப்பில் ஈடுபடும் பணக்காரர்கள், அரசியல் ஆதரவால் பெரிதுபட்ட வில்லன்கள், அவரின் அண்ணன் அட்டகத்தி தினேஷ் உடன் மோதுகிறது. அதனுடன் சேர்ந்த ஒழுக்கக்கேடுகள், அதிகாரத்துடன் நடந்த வாக்குவாதங்கள் என கலையரசன் தனது பணியில் இருந்து நீக்கப்படுகிறார்.
இதிலிருந்து கதை ஒரு பெரிய திருப்பத்தை எடுக்கிறது. வேலை, வாழ்வு தேடும் அவர், புரோக்கர்கள் மூலம் போலியான போலீஸ் அகாடமியில் சேர்க்கப்படுகிறார். அந்த அகாடமி ஆரம்பத்தில் “நக்சலைட்டுகளுக்கான மறுவாழ்வு மையம்” எனும் பெயரில் செயல்படுகிறது. ஆனால் உண்மையில் அது அரசியல்வாதிகள் தேர்தலுக்கு உயிரை வைத்து மிகக் கொடிய சதி ஆட்சி நடத்தும் மேடை.
அந்த அகாடமியில் கலையரசனும், பிறரும் “போலீஸ் பணி நிரந்தரம் கிடைக்கும்” எனும் நம்பிக்கையோடு சேர்கிறார்கள். பொதுமக்கள் பார்வையில் இந்த அகாடமி “நக்சலைட்டுகளை நல்ல பாதைக்கு கொண்டு வரும் அரசு முயற்சி” என பிரசாரம் செய்கிறது.உண்மையில், அதே அகாடமி வழியாக இளைஞர்களை தீவிரவாதிகள் என்று குற்றம்சாட்டி, சட்டவிரோத “என்கவுண்டர்களில்” கொன்று குவிக்கின்றனர்.
இதன் மூலமாக அரசியல்வாதிகள் “நாட்டை தீவிரவாதிகளிடமிருந்து காப்பவர்களாக” கண்ணாடி காட்டிக்கொள்கிறார்கள். காவல்துறை அதிகாரிகள் பதவி உயர்வு பெறுகிறார்கள். ஆனால், பலியாவது அப்பாவி மக்கள்.

இங்கு கலையரசனும் அவரது நண்பனும் ஒன்றுபட்டு, மோதல்–இணைவு–நட்பு போன்ற நுண்ணிய தருணங்களில் மனித உணர்ச்சிக்கான உயிரூட்டலையும் அடுத்த கட்டத்தில் சதி அம்பலமாகும் உண்மையையும் சந்திக்கிறார்கள். நண்பனின் உயிரிழப்பும், கலையரசனின் இறுதி தியாகமும், படத்தை அரசியல் சதி, அதிகார வஞ்சகம், நிர்பராத மக்களின் துயரம் எனும் நிர்வாண உண்மைக்கு இட்டுச் செல்கிறது.
படத்தின் மிகப் பெரிய பலம் அதன் ஒளிப்பதிவு. மலைகளின் அழகிய காட்சிகளும், அங்கு வாழும் மக்களின் எளிய வாழ்வும் நம் கண்களுக்கு விருந்தளிக்கிறது. நம்மை அந்த மலைகளுக்குள், காடுகளுக்குள் அழைத்துச் சென்று, நாமும் அவர்களோடு வாழ்வது போன்ற உணர்வை ஒளிப்பதிவாளர் ஏற்படுத்தியுள்ளார். ஒவ்வொரு காட்சியும் பிரமிக்க வைக்கிறது. ஜஸ்டின் பிரபாகரனின் இசை, கதைக்கு மேலும் உயிரூட்டுகிறது.
அதியன் ஆதிரையின் இயக்கமும், திரைக்கதையும் படத்தின் முதுகெலும்பாக உள்ளன. கலையரசன் மற்றும் அட்டகத்தி தினேஷ் ஆகியோரின் இரண்டு தனித்தனி கதைகளையும் அவர் நேர்த்தியாகப் பேலன்ஸ் செய்து, ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்தி நகர்த்திய விதம் அற்புதம். ஒவ்வொரு காட்சியும் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. இந்தத் திரைப்படம் ஒரு மாபெரும் கலைப் படைப்பு என்பதை இயக்குநர் நிரூபித்துள்ளார். பா ரஞ்சித் அவர்கள் இப்படத்தை தயாரித்திருக்கிறார்

இந்த படம் ஒரு சாதாரண “பிரச்சனையை சுட்டிக் காட்டும் சினிமா” அல்ல.
அதிகார மட்டத்தில் நடக்கும் மிகப்பெரிய அரசியல் சூழ்ச்சியையும் தோலுரித்துக் காட்டுகிறது. இதுபோன்ற உணர்வுபூர்வமான மற்றும் சமூகத்திற்குத் தேவையான திரைப்படங்கள், ஊடகங்களால் அதிகம் பேசப்படாதது வருத்தத்திற்குரியது. இந்த இயக்குநரின் உழைப்பையும், இந்தப் படைப்பின் முக்கியத்துவத்தையும் ஊடகங்கள் இன்னும் அதிக அளவில் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
‘தண்டகாரண்யம்’ ஒரு முக்கியமான சமூக விழிப்புணர்வுப் படம். இது வெறும் பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி, சமூகத்தில் நடக்கும் அநீதிகளைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. இது ஒரு மாபெரும் வாழ்வியல் பதிவு.





